புதன், 9 மார்ச், 2011

காதல்

காதல்...!!
எத்தனைமுறை உச்சரித்தாலும்
இனிக்கும்...

இனிப்பு..
உணர்கிறேன் நாவில் அல்ல, மனதில்..
உன் பெயரை உச்சரிக்கும்போதெல்லாம்...!!

உச்சரித்தேன்,
நான் பிறக்கும்போது ‘அம்மா’ வென்று..
நீ என் பெயரை கூறுகையில் மறுபடியும் பிறக்கிறேன்.

பிறப்பு..
அடுத்த ஜென்மத்தில் நான் எங்ஙனம் பிறந்தாலும்
நீ மட்டும் நீயாகவே தோன்றவேண்டும்.

தோற்றம்..
எனக்கு உன்னைக் கண்டபின்பு - நீ விட்டு விலகியதில்
அனுதினம் சந்திக்கிறேன் மரணம்..!!

மரணம்..
நடந்தபின்பு என்ன நடக்கும் ?
அறிய எல்லோர்க்கும் உயிரோடிருக்கும்போதே ஆசை..!!

ஆசை..
பலப்பல.. ஆளுக்கொன்றாக.. அவற்றை அடையவே
வாழ்கின்றோம் வாழ்க்கை..!!

வாழ்க்கை..
இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது
எல்லோருடைய பலநாள் கனவு..!!

கனவு..
எனக்கு கோட்டையல்ல எப்போதுமே
அது மிகச்சிறிய அழகான குடிசை..

குடிசை..
எரிந்தது உன்னால், பிரச்சினையில்லை - இனி
அழகாய் தெரியும் நிலா..!!

நிலா..
உன்னைவிட அழகு
என்று அன்று நான் சொன்னது பொய்..

பொய்..
.............................
இதற்கு விளக்கம் தேவையில்லை

தேவையில்லை..
என்று நீ கூறிய ஓர் சொல் என்னுள்
ஏற்படுத்தியது ஆறாத காயம்..!!

காயம்..!!
இதற்க்கு சாதிக்கத் தெரிந்தது
ஒன்று மட்டுமே - அதன் பெயர் வலி..

வலி..
நபருக்கு வித்தியாசப்பட்டாலும்
ஆறாமல் விட்டுச்செல்லும் ரணம் என்கிற நினைவுகளை..!!

நினைவுகள் ..
மட்டுமே வாழ்கையை நடத்தினாலும்
சில சமயம் இல்லாமல் போவது நல்லது...!!

நல்லது..
இருவரும் பிரிவது.. !!
என்றதில் தடுமாறி நின்றது என் மனம்..!!

மனம்..
உன்னுடையதாக இருப்பின் - அதை என்னால் இப்பவும்
புரிந்துகொள்ள முடிவதில்லை..!!

இல்லை..
என ஆகிவிட்டது என் வாழ்க்கை
இனி அவரவர் கையில் முடிவு ..!!

முடிவு..
நன்றாகவே அமைந்தது உனக்கு
நானோ தேடிக்கொண்டிருக்கிறேன் என் காதலை..

காதல்...???